Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பெங்களூரு: மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் ஐரோப்பிய நாடுகளில் 2-வது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. அதனால் நமது நாட்டில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை. கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆர்.ஆர்.நகர், சிராவில் பா.ஜனதா வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாக காங்கிரஸ் சொல்கிறது.
ஊழல் குறித்து டி.கே.சிவக்குமார் பேசுவது நகைச்சுவையாக உள்ளது. ஊழலில் சிக்கியுள்ள அவர், ஜாமீனில் வெளியே இருக்கிறார். இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. மக்கள் பா.ஜனதாவை ஆதரிக்க தயாராக உள்ளனர். இதை முதலில் டி.கே.சிவக்குமார் புரிந்துகொள்ள வேண்டும். புல்வாமா தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியதை அந்த நாட்டின் மந்திரியே ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் அதற்கு சாட்சி கேட்கிறார்கள். அவர்களுக்கு பாகிஸ்தானியர்களே பதில் கொடுத்துள்ளனர். பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறது என்று நாங்கள் சர்வதேச அளவில் எடுத்து கூறி வருகிறோம். இப்போது அவர்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தியா வலுவான நாடு என்பது பாகிஸ்தானுக்கு தற்போது புரிந்துள்ளது. இவ்வாறு பிரகலாத்ஜோஷி கூறினார்.